உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வடக்கில் தற்காலிக ஊழியர்களைநிரந்தரமாக்க ஆளுநர் உத்தரவு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

அரச திணைக்களங்களில் பல ஆண்டுகளாக தற்காலிக, அமைய (நாளாந்த), பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் பணியாற்றும் ஊழியர்களை அரச சேவைக்கு நிரந்தரமாக உள்வாங்குவது தொடர்பில் அரசால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக, வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை இரு வார காலத்தினுள் துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாணத் திணைக்களத் தலைவர்களுடனான விசேட முகாமைத்துவக் கலந்துரையாடல், ஆளுநரின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போதே ஆளுநர் அவர்கள் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

அரச நிறுவனங்களில் தற்காலிக, அமைய (நாளாந்த), பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, தொடர்ச்சியாக 180 நாள்களைப் பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதில் நீண்டகாலமாகப் பல சிக்கல்கள் நிலவி வந்தன.

அரச நிர்வாகச் சுற்றறிக்கை 25/2014 மற்றும் 29/2019 ஆகியவற்றின் அடிப்படையில் நியமனங்களை வழங்குவதில் காணப்பட்ட இத்தடைகளை நீக்கி, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் விசேட முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கமைவாகவே தற்போது அரச நிர்வாகச் சுற்றறிக்கை 11/2026 வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சுற்றறிக்கையின் மூலம், நிரந்தர நியமனங்கள் வழங்குவதில் இதுவரை காலமும் காணப்பட்ட நிர்வாகத் தடைகள் முற்றாக நீங்குவதுடன், ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஆளுநர் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணியும் பயிற்சியும்) செ.பிரணவநாதன், புதிய சுற்றறிக்கையின் பிரதான உள்ளடக்கங்கள் குறித்தும், அதனை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைகள் குறித்தும் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், அரச நிர்வாகச் சுற்றறிக்கை 25/2014 இன் கீழ் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இதுவரை கிடைக்கப்பெறாத 107 ஊழியர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ளமை குறித்தும், அரச நிர்வாகச் சுற்றறிக்கை 29/2019 இன் கீழ் நிரந்தர நியமனம் கோரி விண்ணப்பித்த 307 ஊழியர்கள் உள்ளமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களில் தற்போது வரையில் சேவையில் தொடரும் ஊழியர்கள் தொடர்பான திணைக்கள ரீதியான தரவுகளையும் அவர் சபைக்குச் சமர்ப்பித்தார். இதன்போது, நியமன அதிகாரிகள் நிரந்தர நியமனங்களை வழங்குவதில் தாங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தற்போதைய நிலைமைகளைக் கௌரவ ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

அனைத்து விடயங்களையும் கேட்டறிந்த ஆளுநர், அதிகாரிகளுக்குப் திட்டவட்டமான பணிப்புரைகளை வழங்கினார்: அரச நிர்வாகச் சுற்றறிக்கை 11/2026 இன் நியமங்களின்படி, தகைமை பெற்றுள்ள அனைவருக்கும் எவ்வித தாமதமுமின்றி வழமையான அனுமதி நடைமுறைகளினூடாக நிரந்தர நியமனங்களை இரு வாரங்களுக்குள் விரைவாக வழங்க வேண்டும்.

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் அனுமதி பெறவேண்டியுள்ள நியமனங்கள் தொடர்பில், உரிய வழிமுறைகளினூடாக உடனடியாகக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்து துரிதமாக அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய சுற்றறிக்கையின் கீழ் உள்ளடக்கப்பட முடியாமல், நிரந்தர நியமனம் பெறத் தகுதியற்றவர்களாக ஏதேனும் ஊழியர்கள் இருப்பின், அவர்களைக் கைவிடாது, அவர்களது முழுமையான விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துச் சமர்ப்பிக்க வேண்டும். அவை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களுக்கான மாற்றுத் தீர்வுகள் குறித்து ஆராயப்படும் என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0