வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் எழுபத்தி நான்காவது கட்டமானது 26.04.2026 இன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரது மக்கள் தொடர்பகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இக்கட்டத்தில் தாயகத்தைச் சேர்ந்த 61 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த செயற்றிட்டமானது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கடந்த 17.05.2014 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த எழுபத்திநான்காம் கட்டத்துடன் இதுவரையில் 4,019குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
மேலும் 02ஆம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அமரர் நாகராசா சாம்பசிவம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் ரவிகரன் பானுகோபன் அவர்களால் வாழ்வோம் வளம்பெறுவோம் 74ஆம் கட்டத்திற்குரிய நிதியுதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















