அநுரவுக்கு எதிராக வருகின்றது நம்பிக்கையில்லாப் பிரேரணை.!
அரசின் இரு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. நிதி அமைச்சராகப் பணியாற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர ஆகிய இருவருமே இந்தப் பிரேரணைகளுக்கு முகங்கொடுக்கவுள்ளனர்.
மே மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரச திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் நிதி, போலியான வெளிநாட்டு வங்கிக் கணக்கொன்றுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடு தொடர்பாக, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு எதிராக இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், கிழக்கு கட்டளைப் பிரிவின் தளபதியாகக் கடமையாற்றிய இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர, அத்தாக்குதல்களைத் தடுப்பதற்கு எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
இந்த இரு விவகாரங்களையும் மையப்படுத்திய நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில் அடுத்த வாரம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிடத் திட்டமிட்டுள்ளனர்.
அரசின் முக்கிய பதவிகளை இலக்கு வைத்து எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள இந்த நகர்வு, தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.