நாட்டின் பல பகுதிகளில் வெப்பக் குறியீடு எச்சரிக்கை மட்டத்தை எட்டும் அபாயம்.!
நாட்டின் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு இன்று (26) எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதிய நேரத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மனித உடல் உணரும் வெப்பக் குறியீடு ஆபத்தான அளவிற்கு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் நேரடி சூரிய ஒளியில் இருப்பது மற்றும் வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவது உடல் சோர்வை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், தேவையற்ற வெளிப்புற செயல்பாடுகளை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடினமான உடற்பயிற்சிகள் அல்லது உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு தசைப்பிடிப்பு (Heat Cramps) ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வீட்டுக்குள் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயாளிகள் குறித்து குடும்பத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.