ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு: பொலிஸ் விசேட அறிவிப்பு.!
பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகள் தொடர்பில், பொலிஸ் தலைமையகம் பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு விசேட நினைவூட்டலை விடுத்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டவிதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில், ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு பின்வரும் நேர எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
திங்கள் முதல் வியாழன் வரை காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த அனுமதி அதிகாலை 1.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணி வரை ஒலிபெருக்கி பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த நேரக் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒழுங்காகவும் சட்டத்திட்டங்களை மதித்தும் நிகழ்வுகளை நடத்த வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த விதிமுறைகளை மீறும் நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.