கிழக்கில் அபகரிக்கப்பட்டுள்ள குடியிருப்பு; மீள மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட காணி வாரம் !
கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்டுள்ள குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் கலாச்சார அடையாளங்களுக்குரிய காணிகளை பறிக்கப்பட்டமை அடிப்படை உரிமை மீறல் என வலியுறுத்தியும் அவற்றினை மீள மக்களிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான காணி வார செயற்பாடுகள் கடந்த ஒருமாதகாலமாக நடைபெற்றுவந்த நிலையில் இந்த செயற்பாட்டின் இறுதிநாள் செயற்பாட்டு நிகழ்வு இன்று நரைடபெற்றது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காணியை இழந்தவர்களின் கருத்துக்களை மற்றும் ஆலோசனைகளை முன்வைக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கு மாகாணதில் தங்களது குடியிருப்பு, ஜீவனோபாய மற்றும் மத வழிபாட்டு இடங்கள் என இலங்கை அரசின் 7 வகையான பொறி முறைகள் ஊடாக கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இக்காணிகளை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு காணியை இழந்த மக்கள் பல ஆண்டு காலமாக முயற்சித்து வருகின்றனர்.அவர்களின் அடிப்படை உரிமையினை வலியுறுத்தும் வகையில் இந்த வாரம் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் 23ஆம் திகதி தொடக்கம் நடைபெற்றுவந்தது.
இறுதி நாள் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு சர்வோதயம் மண்டபத்தில் அகம் மனிதவள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள்கூடல் ஆகிய அமைப்புகள் இணைந்து கிழக்கு மாகாண காணி வலையமைப்பு ஊடாக இந்த நிகழ்வினை நடாத்திவந்தது.
அகம் மனித வள நிலையத்தின் பணிப்பாளர் கண்டுமணி லவகுகராசா,சூழலியல் நீதிக்கான மக்கள்கூடல் அமைப்பின் இணைப்பாளர் த.கிருஸாந்த் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீன், முன்னாள் கிழக்கு காணி ஆணையாளரும் காணி விசேட மத்தியத்தர்கள் சபை தவிசாளருமான கே.குருநாதன் ஆகியோர் சிறப்பு வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகணத்தின் திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காணிகளை இழந்த மக்கள்,காணி வலையமைப்பின் உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது காணிகளை இழந்துள்ள மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள்,சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் தமது காணிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு சட்டரீதியாக முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.