அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாம்.!
“மக்களுக்கு வழங்கிய பொய் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள தற்போதைய அரசாங்கம், நிர்வாகத் தோல்விகளால் மக்கள் மீது வரிச்சுமைகளை ஏற்றி வருகின்றது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற புத்தாண்டு விசேட நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நிலக்கரி மற்றும் உள்நாட்டு மின்சார உற்பத்தியை முடக்கிவிட்டு, நாட்டில் டீசல் மாஃபியாவுக்கு அரசாங்கம் வழிவகுத்துள்ளது. இதனால் மக்கள் மீது அநியாயமான மின்கட்டணச் சுமை சுமத்தப்பட்டுள்ளது.
நிலக்கரி இறக்குமதியில் பாரிய ஊழல் நடைபெற்றுள்ளதை தணிக்கை அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. இதனை மறைக்க அதிகாரிகளைப் பலிக்கடா ஆக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுகின்றது.
உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளமை அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகின்றது.” – என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் திசைதிருப்பப்படுவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். உண்மையான குற்றவாளிகளை மறைத்துவிட்டு, அரசியல் மேடைகளில் கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சாடினார்.
இம்முறை மே தினமானது வெசாக் பௌர்ணமி தினத்துடன் ஒத்துப்போவதால், அதனை ஒரு மத ரீதியான தினமாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனுஷ்டிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழிலாளர்களுக்கு ஆசி வேண்டி நாடு முழுவதும் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும், வழமையான அரசியல் பேரணிகள் இடம்பெறாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகள் கடந்த காலத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் நாடகங்கள் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்துவதற்கான கிராமிய மட்ட மறுசீரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் உறுதிப்படத் தெரிவித்தார்.