“வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் பதவி விலகல் வரவேற்கத்தக்கது என்றாலும், அது மிகவும் காலம் தாழ்ந்த ஒரு முடிவாகும்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமைச்சரின் இராஜினாமா குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒரு நாள் முழுவதும் நாடாளுமன்றம் விவாதித்ததைச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததன் மூலம், அவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்து அமைச்சருக்கு ஆதரவாக நின்றதை உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்.
“நிலக்கரி ஊழலால் நாட்டுக்கு ஏற்கனவே பல மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் இந்த மாபெரும் மோசடியால் பாதிக்கப்படப்போவது அப்பாவி நுகர்வோர்தான். ஒரு பதவி விலகல் மாத்திரம் இந்த இழப்புகளுக்கு ஈடு செய்து விடுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
குமார ஜயக்கொடியின் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்துத் தெரிந்திருந்தும், அவரை இவ்வளவு சக்திவாய்ந்த அமைச்சராக நியமித்தமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“முதலீட்டு வாரியம் விசாரணைகளைத் தொடங்கிய பின்னரும் ஜனாதிபதி அவரைத் தொடர்ந்து ஆதரித்து வந்தார். அமைச்சரின் பின்னணி தெரிந்திருந்தும் அவரை அப்பதவியில் அமர்த்தியது ஏன்?” என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. கேள்வி எழுப்பினார்.
அரசு ஊழலுக்கு எதிரானவர்கள் என்று கூறிக்கொண்டு, நடைமுறையில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களைப் பாதுகாக்கும் போக்கையே கடைப்பிடிக்கின்றது என்றும் அவர் மேலும் சாடினார்.










