கோர விபத்துக்களில் இருவர் பரிதாபப் பலி!
நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று ஏப்ரல் 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்மீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நராவல, பொத்தல காசல் ஹில்வத்தை வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவ்வீதியின் மேட்டுப் பகுதியொன்றிலிருந்து திடீரெனப் பின்னோக்கி நகர்ந்த கப் ரக வாகனம் ஒன்று, பாதசாரி மீது மோதியதிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நராவல பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய கப் ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணவல – தம்பவிட்ட வீதியின் எரமினிகம்மன பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த மோதலில் இரு மோட்டார் சைக்கிள்களின் சாரதிகள் மற்றும் பின்னால் பயணித்தவர்கள் என நால்வர் படுகாயமடைந்து ஹெம்மாத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெவனகல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மற்றைய மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மாவனெல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துக்கள் குறித்து அக்மீமன மற்றும் ஹெம்மாத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.