காணி அளவீடு செய்வதற்கு எதிரான போராட்டத்திற்கு த. தே. ம. மு பூரண ஆதரவு.!
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவப் பயன்பாட்டிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த அளவீட்டின் மூலம், கடந்த 17 ஆண்டுகளாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 4ஆம் பட்டாலியன் மின் மற்றும் இயந்திரவியல் பிரிவுக்காக காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மக்களின் விருப்பத்திற்கு மாறானதாக இருப்பதாகவும், தங்கள் உரிமைகளை பாதுகாக்க போராட்டம் அவசியம் எனவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த போராட்டத்திற்கு பூரண ஆதரவை அறிவித்துள்ளதுடன்சமூக ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், பொதுமக்களின் காணிகளை இராணுவத்திற்காக வழங்க முடியாது என்றும், சம்பந்தப்பட்ட படைகள் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.