இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் சார்ஜென்ட்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான போக்குவரத்து பொலிஸ் சார்ஜென்டை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான விசாரணையை சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் போக்குவரத்து பொலிஸ் சார்ஜென்ட் நேற்று வியாழக்கிழமை(26) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் வியாழக்கிழமை(26) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வழக்கினை ஒத்திவைத்தார்.
மேற்குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான விசாரணையை சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக ஒருவரிடம் ரூபா 20 ஆயிரம் இலஞ்சம் கோரிய நிலையில் முதற்கட்டமாக பாதிக்கப்பட்டவர் ரூபாய் 1000 வழங்கியுள்ளார். எஞ்சிய பணத்தை கொடுக்க முடியாத நிலையில் இறுதியாக ரூபாய் 4000 தருவதாக கூறியுள்ளார்.
குறித்த ரூபா 4000 தொகையை பெற்றுக்கொள்வதற்காக சந்தேக நபரான போக்குவரத்து பொலிஸ் சார்ஜென்ட் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகில் பாதிக்கப்பட்ட நபரை அழைத்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினர் அவ்விடத்தில் மாறுவேடத்தில் சென்று சந்தேக நபரை இலஞ்சம் பெற்ற நிலையில் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.