வவுனியா மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு சுமூகமாக இடம்பெற்று வருகின்றது. இதுவரை காலமும் நெல் கொள்வனவு தொடர்பில் இருந்த பிரச்சினைகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் போதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்திருந்தார்.
அன்மையில் விவசாய அமைச்சின் ஆலோசனைக்கூட்டம் ஒன்றின் போதும் இவ்விடயம் தொடர்பில் விவசாய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றிருந்தார். நெல் கொள்வனவு இன்மை, தாமதம், விலைப் பிரச்சினை என்பன தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துக் கூறியதுடன் விரைவான நடவடிக்கைக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது அமைச்சரின் பணிப்புரைக்கமைய நெல் சந்தைப்படுத்தல் சபையினால் வவுனியா மாவட்டத்தில் நெல் கொள்வனவு சீராக இடம்பெற்று வருகின்றது.
இதுதொடர்பில் நேற்று முன்தினம் (10.03.2026) வவுனியா மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளத்தினர் வவுனியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து மாவட்ட விவசாயிகள் சார்பாக தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.
மேலும், வவுனியா மாவட்டத்தில் விவசாயத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
அவற்றை ஆர்வத்துடன் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவ் விடயங்களை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்த்துவைப்பதற்குரிய முயற்சியை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.










