கர்நாடக மாநிலத்தில் பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் சித்தராமையா இன்று (06) அறிவித்துள்ளார்.மாநில சட்டமன்றத்தில் 2026–2027 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சுமார் நான்கு இலட்சத்து இருபதாயிரம் கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான இந்த நிதித் திட்டம், பெங்களூரு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுவர்களிடையே அதிகரித்து வரும் கைப்பேசி பயன்பாடு மற்றும் சமூக ஊடக ஈடுபாடு தொடர்பான கவலைகளை கருத்தில் கொண்டு இந்தத் தடை முன்மொழியப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.பதினாறு வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது குறித்து மாநில அரசுக்குள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.










