வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தனக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையிலான அரசியல் போட்டியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அணுகுமுறை தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
முன்னதாக, தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் தி.மு.க.வுக்கும் நேரடி போட்டி என அவர் கூறி வந்த நிலையில், தற்போது போட்டியை இரு தலைவர்களுக்கு இடையிலான நேரடி மோதலாக சித்தரித்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது” எனக் கூறி நிர்வாகிகளிடம் உறுதிமொழி பெற்றார்.
பின்னர் ஒரு குட்டிக் கதையை எடுத்துரைத்து, பிரச்சினைகளை சரியான அணுகுமுறையுடன் சமாளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தி.மு.க. ஆட்சியை விமர்சித்த அவர், மக்கள் எதிர்பார்த்த நல்ல தலைமையில்லாததால் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறினார்.
தங்கள் இயக்கம் மக்களுக்கு மாற்று சக்தியாக உருவாகியுள்ளதாகவும், ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக சென்று மக்களை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், வரவிருக்கும் தேர்தல் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன என்றும், இது தமிழ்நாட்டு மக்களுக்கும் ஆட்சிக்கும் இடையிலான தேர்வாக அமையும் என்றும் விஜய் கூறினார். தி.மு.க. ஆட்சியை “தீய சக்தி” என விமர்சித்த அவர், தனது கட்சியை “நல்ல சக்தி” என குறிப்பிட்டார்.
அரசியல் ஆய்வாளர்கள், பிரசாரத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பாணியில் முன்னெடுக்க விஜய் முயற்சிக்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். இருப்பினும், தற்போதைய அரசியல் சூழலில் அவருடைய அணுகுமுறை எவ்வாறு பலனளிக்கும் என்பது தேர்தல் காலத்தில்தான் தெளிவாகும் எனக் கருத்து தெரிவிக்கப்படுகிறது.











