தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து மனு எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் முன்னிலையாகவில்லை.
அவர்களது சட்டத்தரணிகள் மட்டும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை ஜூன் 15 ஆம் திகதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில், விவாகரத்து வழக்கில் வீடியோ அழைப்பு மூலம் ஆஜராக அனுமதி கோரி முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், வீடியோ அழைப்பு விசாரணைக்கு தேவையான இ-மெயில் முகவரி உள்ளிட்ட ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று விசாரணைக்கு முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் முன்னிலையாகாதமையினால் வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது










