வெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் இரகசிய உரையாடல் கசிந்தது.!
வெளிநாட்டில் பதுங்கியுள்ள நான்கு முக்கிய பாதாள உலக நபர்கள் கலந்துரையாடிய தொலைபேசி உரையாடலொன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
சுமார் இருபத்தி இரண்டு நிமிடங்கள் நீடிக்கும் இந்த உரையாடலில், நான்கு முக்கிய பாதாள உலக நபர்களான ரசல் ஸ்மித், பிரான்ஸ் ரூபன், இங்கிலாந்தைச் சேர்ந்த குடு லால் மற்றும் வெல்லே சாரங்க ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
இவர்கள் தங்கள் எதிர்காலத்திட்டங்கள், குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் பற்றி கலந்துரையாடியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த குரல் பதிவு சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ‘வெல்லே சாரங்க’ என்பவரை அந்த நாட்டு பொலிஸார் நடத்திய விதம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் அந்நாட்டுப் பிரஜைகளைத் தாக்குவதற்கு, இலங்கையிலுள்ள தனது சகாக்களைத் தூண்டுவது தொடர்பாக ரசல் ஸ்மித் இந்த உரையாடலில் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.