சிறுமி துஷ் – பிரயோகம்; குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!
14 வயது சிறுமி பாலியல் துஷ் – பிரயோகம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை (2) கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி தீர்ப்பினை கல்முனை மேல் நீதிமன்ற தற்போதைய நீதிபதி அண்டனிப்பிள்ளை ஜூட்சன் வாசித்தார்.
2020 தொடக்கம் 2021 வரை குறித்த சிறுமி 3 தடவைகள் பாலியல் துஷ் – பிரயோகத்திற்கு உள்ளாகி வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதுடன் சிறுமி கர்ப்பமடைந்து ஆண் குழந்தை ஒன்றினையும் பிரசவித்துள்ளார்.
27 வயதுடைய குறித்த குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ரொக்சியின் தீர்ப்பினை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அண்டனிப்பிள்ளை ஜூட்சன் மன்றில் அறிவித்தார். மனுதாரர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் ஆஜராகி இருந்தார். இதன்போது ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபா 10 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த தண்டப்பண தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும் எனவும் அதனை செலுத்த தவறின் 1 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் நஷ்டஈடு செலுத்தாத விடத்து 3 குற்றச்சாட்டிற்கும் தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.