இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் தந்த சௌமியமூர்த்தி தொண்டமான் என்றும் நினைவுகூரப்படுவார்.!
இலங்கை வரலாற்றிலும், மலையக வரலாற்றிலும் தனித்துவமான இடத்தைப் பிடித்து என்றும் மறக்க முடியாத மாமனிதராய் போற்றப்படுகின்ற அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர் என்பதால் அவரது சேவையை நினைவுகூரும் வகையில் சில நிறுவனங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை அகற்ற நினைப்பது மலையக சமூகத்தை இழிவுபடுத்தும் அநாகரிகமான செயலாகும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், இந்நாள் உறுப்பினருமான குழந்தைவேல் ரவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர், மேலும் தமது அறிக்கையில்,
இலங்கை – இந்தியன் காங்கிரஸ் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டதாகும். பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என மாற்றம் பெற்றது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் ஆசியா கண்டத்தில் மிகப்பெரும் தொழிற்சங்கமாக உருவெடுத்து எமது மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரலாறு படைத்துள்ளது. 1947 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொண்டமான் உட்பட 7 பேர் மலையக மக்கள் சார்பில் வெற்றி பெற்றிருந்தார்கள். அதனால், எமது வளர்ச்சியைப் பொறுக்க முடியாதவர்கள் 1948 இல் குடியுரிமையை பறித்தார்கள். 1952 பொதுத் தேர்தலிலிருந்து அரசியல் அனாதையாக இருந்த மக்களுக்கு 1980களில் சத்தியக் கடதாசி மூலம் பிரஜாவுரிமை பெற்றுக் கொடுத்த பெருமை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானையே சாரும்.
தொண்டமான் பிரஜாவுரிமை பெற்றுக் கொடுத்தால், வாக்குரிமை கிடைத்தது. அதன் பயனாகத்தான், இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் உள்ளூராட்சி, மாகாண, நாடாளுமன்ற பிரதிநித்துவம் அதிகரிக்கத் தொடங்கியது. தொண்டமான் பெயரை நிறுவனங்களுக்கு சூட்டியுள்ளமை சாபக்கேடு என்று கூறுகின்றவர்கள் கூட வாக்களிக்கும் உரிமை பெறுவதற்கு தொண்டமானே காரணமாக இருந்துள்ளார் என்று மறந்து விட்டார்கள். குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பான சிலர் அரசியலில் இருப்பது கூட சமூகத்துக்கு ஒரு சாபக்கேடுதான் என்று கூற வேண்டியுள்ளது.
சமூகத்துக்கு அளப்பரிய சேவைகள் செய்தவர்கள் காலத்துக்கும் நினைவு கூறப்பட வேண்டும். அடுத்து வரும் சந்ததிகளுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு பெயர் சூட்டப்பட்டு வருகின்றது.
உதாரணத்துக்கு பராக்கிரம சமுத்திரம், திசவாவி போன்ற மன்னர்களின் பெயர்களில் நீர்த்தேக்கங்கள், பண்டாரநாயக்க விமான நிலையம், மாநாட்டு மண்டபம், ஸ்ரீமா, ஜெயவர்தன, மகிந்த, பெயர்களில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், சுகததாச, பிரேமதாச, வின்சன்ட் பெரேரா விளையாட்டு மைதானங்கள், கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையம், அஷ்ரப் வைத்தியசாலை மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களில் வீதிகள் போன்றவை இருக்கின்றன. தொண்டமான் பெயரில் கட்டிடங்கள் இருக்கக் கூடாது என்றால், ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள பெயர்களையும் நீக்க வேண்டும் அல்லவா?
சமூக ரீதியில் அரசியல் ரீதியில் நிலைத்திருக்கக் கூடிய சேவைகளை செய்தவர்களுக்கு காலத்தால் நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்கள், பெயர்ப் பலகைகள் வைத்திருப்பது ஒன்றும் சமூகவிரோதச் செயல் அல்ல செயற்கரிய செயல்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.