இலங்கையில் ஒரு இனம் தான் சுதந்திரத்தை கொண்டாடுகிறது.!
இலங்கையின் சுதந்திர தினத்தை ஒரே ஒரு இனம் தான் கொண்டாடுவதாகவும், தமிழர்களுக்கு இலங்கையில் சுதந்திரம் இல்லை என்பதனால் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (31) தனது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்ததற்கு பிற்பாடு அன்றிலிருந்து இன்று வரை அது ஒரு இனத்தினுடைய சுதந்திர தினமாகத்தான் கொண்டாடப்படுகிறது.
தமிழ் மக்களை பொறுத்தவரை அல்லது ஏனைய சிறுபான்மை மக்களை பொறுத்தவரை இலங்கையினுடைய சுதந்திரதினம் ஒரு கரிநாளாகவே அனுஷ்டிக்கப்படுகிறது. காரணம் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் இலங்கையில் சுதந்திரம் இல்லை.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் முழுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள். கல் ஓயா திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அம்பாறையில் தமிழ் மக்கள் முற்று முழுதாக இடம்பெயர வைக்கப்பட்டனர். அதன் பின்பு குடியேற்றங்கள் கொண்டு வரப்பட்டு திருகோணமலை ஆக்கிரமிக்கப்பட்டது. யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது மணலாற்றில் இருந்த தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுடைய காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இன்றுவரை அந்த காணிகள் விடுவிக்கப்படவில்லை.
வடகிழக்கில் பெருமளவான தமிழ் மக்களுடைய காணிகள் இலங்கை முப்படைகளின் வசம் இருக்கிறது.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு முடிந்தவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
காணாமல் போனவர்கள் தொடர்பாக இன்று வரை எந்தவிதமான தகவலும் இல்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை, திட்டமிட்ட வகையில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் எவ்வாறு இலங்கையில் சுதந்திர தினத்தை தமிழர்கள் கொண்டாடுவது?
ஆகவே இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக தமிழ் மக்கள் அனுஷ்டிக்க வேண்டும். 2011 ஆம் ஆண்டு வரை எந்த ஒரு தமிழ் கட்சிகளும் இலங்கையினுடைய சுதந்திர தினத்தில் கலந்து கொள்ளவில்லை. 2011ம் ஆண்டுக்கு பிற்பாடு தான் சம்பந்தன் தலைமையிலான அணியினர் ரணிலுடைய ஆட்சியில் சுதந்திர தினத்தில் கலந்து கொண்டனர்.
ஆகவே, சில நாட்களில் இடம்பெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கப்போகும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனைத்து தமிழ் மக்களும் ஒத்துழைப்பு வழங்கி இலங்கையினுடைய சுதந்திர தினத்தை அனைவரும் கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.