வடக்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் கொ*லை: விசாரணைகள் தீவிரம்.! – இளங்குமரன் எம்.பி. தெரிவிப்பு!
வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அரசின் மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இதனையடுத்து, இந்த விடயங்கள் தொடர்பில் விரைவில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், எமது அரசாங்கம் எந்தவிதத் தளர்வும் இன்றி விசாரணை நடத்தி, நீதி நிலைநாட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் வலியுறுத்தினார்.