மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்திப் பாதையில் – ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிப்பு.!
மண்முனை தென்எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மாலை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் ஆரம்பத்தில், கடந்த காலங்களில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குறைபாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி, வீதி புனரமைப்பு, மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட துறைகளின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றன.
எதிர்வரும் காலங்களில் இத்துறைசார் தேவைகளைச் சீர்செய்வதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன. சில துறைகள் தொடர்பான விவாதங்களின் போது வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்ட போதிலும், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் அதனைச் சீராகக் கட்டுப்படுத்தி, துறைசார் அபிவிருத்தியை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் உரிய ஆலோசனைகளை முன்வைத்தார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. ஸ்ரீநேசன் மற்றும் இ. சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மே. வினோராஜ், பிரதேச செயலாளர் உ. உதயசிறிதர், திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, இது இவ்வருடத்தின் முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமாகும் எனத் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக ரூ.121 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் தற்போது 100 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கிராமிய வீதிகள் அபிவிருத்திக்காக ஆர்.டி.ஏ மூலம் ரூ.37.5 மில்லியன் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், நீர்ப்பாசன அபிவிருத்திக்காக ரூ.10.9 மில்லியன் ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண வேலைத்திட்டங்களின் கீழ் பல லட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பல அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாக அபிவிருத்திப் பாதையை நோக்கி முன்னேறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.மேலும், கடந்த காலங்களில் கைவிடப்பட்ட வீதி மற்றும் வீட்டு திட்டங்கள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஜே-ரோட் திட்டத்தின் கீழ் ஆர்.டி.ஏ இணைந்து மேற்கொள்ளும் வீதி அபிவிருத்திப் பணிகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 48 வீதிகளுக்காக ரூ.2534 மில்லியன் பெறுமதியான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த வேலைத்திட்டங்கள் தற்போது நடைமுறையில் இருப்பதாகவும், விரைவில் அவை பூர்த்தி செய்து மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


