மாந்தை கிழக்கு 50 வீட்டுத்திட்ட வீடுகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் மீள அமைத்து வழங்கப்பட வேண்டும்.!
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 50 வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள 50 வீடுகளும் மிக மோசமாகச் சேதமடைந்து காணப்படுவதால் குடியிருப்பாளர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் மீள அமைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் மீள அமைத்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மாந்தை கிழக்கு பிரதேசத்திலுள்ள 50 வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள சகல வீடுகளும் மிக மோசமாகச் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
அங்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டுள்ளேன்.
குறித்த 50 வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் பாதிப்படைந்த வீடுகளில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே 50 வீட்டுத்திட்டம் பகுதியில் அமைத்துக் கொடுக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் மீண்டும் முன்னுரிமை அடிப்படையில் அமைத்துக் கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் அமைத்துக் கொடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரனால் பதில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.