நிலக்கரி இறக்குமதியில் மோசடி: நிறுவனத்திற்கு கடும் அபராதம்.!
கொழும்பு – தரமற்ற நிலக்கரி விநியோகிக்கப்பட்டமை தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக, இன்று (28.01.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தின் நிபுணர்கள் முன்னிலையில் நிலக்கரி மாதிரிகள் பெறப்பட்டு, அவை மேலதிக பரிசோதனைகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், இரண்டாவது நிலக்கரி கப்பலிலிருந்து பெறப்பட்ட மாதிரி அறிக்கைகளில் எந்தவித குறைபாடுகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, மூன்றாவது மற்றும் நான்காவது நிலக்கரி கப்பல்களிலிருந்து நிலக்கரி இறக்கும் பணிகள் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.நிலக்கரி எரிப்பின் போது உருவாகும் சாம்பல் காரணமாக சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என உறுதியாகக் கூற முடியும் என்றும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுள்ளதாகவும் நாமல் ஹேவகே தெரிவித்தார்.
நிலக்கரி எரிப்பின் போது பறக்கும் சாம்பல் (Fly Ash) மற்றும் அடிச்சாம்பல் (Bottom Ash) என இரண்டு வகையான சாம்பல்கள் உருவாகுகின்றன என்றும், இவ்விரண்டும் சூழலுக்கு தீங்கு விளைவிப்பவை அல்ல என நிபுணர்கள் தமக்குத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும், பறக்கும் சாம்பலுக்கு அதிகமான சந்தை தேவை நிலவுவதால், அதனைச் சேகரித்து விநியோகிப்பதற்காக விசேடமாகத் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், சூழலுக்குத் திறந்த நிலையில் இல்லாத வகையில் வாடிக்கையாளர்கள் அவற்றை எடுத்துச் செல்வதை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, பறக்கும் சாம்பலினால் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், பொதுமக்கள் இதுதொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் மேலும் வலியுறுத்தினார்.