தேசிய மகளிர் ஆணைக்குழு முதல் தலைவர் டாக்டர் ரமணி ஜயசுந்தர பதவி விலகல்.!
கொழும்பு – தேசிய மகளிர் ஆணைக்குழுவின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் ரமணி ஜயசுந்தர, இன்று (28.01.2026) தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பதவியேற்று நான்கு மாதங்களுக்குள், ஆணைக்குழுவை செயற்படுத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பதையே தனது இராஜினாமாவுக்கான பிரதான காரணமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, டாக்டர் ரமணி ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை நேற்று (27.01.2026) ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.2024 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பெண்களுக்கு அதிகாரமளித்தல் சட்டத்தின் கீழ் இந்த தேசிய மகளிர் ஆணைக்குழு நிறுவப்பட்டதுடன், இது இலங்கையில் பெண்களுக்கான முதல் சட்டபூர்வமான ஆணைக்குழுவாகும்.
2025 செப்டம்பர் மாதம் டாக்டர் ரமணி ஜயசுந்தர தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து, ஆணைக்குழுவிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு, சுயாதீனமான அலுவலக வசதிகள் மற்றும் தேவையான ஊழியர்கள் ஆகியவை வழங்கப்படாமல் அரசாங்கம் தவறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான தேசிய கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துவதும், பெண்களின் உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதும் இந்த ஆணைக்குழுவின் பிரதான பணிகளாகும். இவ்வாறான முக்கிய பொறுப்புகள் இருந்தும், தேவையான ஆதரவு இல்லாத காரணத்தால் ஆணைக்குழு செயலற்ற நிலையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைக்குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.