இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!
திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவின் படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி 90 நாட்கள் மேலதிக தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. 90 நாட்களுக்கான முன் தடுப்புக்காவல் ஜனவரி 15ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அவரை தொடர்ந்தும் காவலில் வைக்க நீதவான் அனுமதி வழங்கினார்.இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களைக் கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறைக்கு ‘சிவப்பு அறிவித்தல்’ (Red Notice) பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக சம்பத் அஷேன், ஷான் அரோஷ் (மத்துகம ஷான்), படுவத்தே சாமர மற்றும் டுபாய் சுத்தா ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்படவுள்ளது.
வழக்கில் நான்கு சந்தேகநபர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர், ஏனையவர்கள் {Zoom } தொழில்நுட்பம் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.மீதமுள்ள சந்தேகநபர்கள் பெப்ரவரி 6 வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.