மட்டக்களப்பில் நடைபெற்ற அமரர் சி.மு. இராசமாணிக்கம் நினைவுகூறல் நிகழ்வு..!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தின நினைவு நிகழ்வு, இன்று மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சாணக்கியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும், நகர மற்றும் பிரதேசக் கிளை முதல்வர்கள், தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர்ப் பெருமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று அமரருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வின்போது, அமரர் சி.மு. இராசமாணிக்கத்தின் அரசியல் பயணம், தமிழர் நலனுக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு சேவைகள் மற்றும் அவரது மக்கள் நேசம் குறித்து உரையாற்றப்பட்டு, அனைவராலும் நினைவு கூறப்பட்டது.



