அரசியல் குழு ஆலோசனைக்கு செவிமடுக்காத சிறிதரன் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி மீளப்பெற தீர்மானம் – சுமந்திரன் தெரிவிப்பு.!
அரசியல்குழுவின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று பிற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவினாலேயே வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார். தேர்தல் முடிவடைந்த பின்னர் வவுனியாவில் நடைபெற்ற அரசியல்குழு கூட்டத்தில், அந்நேரத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.
அந்தக் கூட்டத்திலேயே தேசியப் பட்டியல் ஆசனத்தை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டதாகவும், அதேபோன்று அவருக்கு பாராளுமன்றக் கொறடா பதவியை வழங்கவும், பாராளுமன்ற நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை நியமிக்கவும் அரசியல்குழு தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை அரசியல்குழுவே நியமித்ததாக சுமந்திரன் கூறினார்.நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, அரசியல்குழுவினால் வழங்கப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான அதிகாரம் அரசியல்குழுவுக்கே உண்டு என்றும், எந்தக் குழு நியமித்ததோ அதனை மாற்றுவதற்கும் அதே குழுவுக்கே அதிகாரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல்குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணமாக, அரசியல்குழுவினால் வழங்கப்பட்ட பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியை மீளப்பெற தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.அரசியல்குழு அவர்மீது நம்பிக்கை வைத்து, ஏகமனதாக அந்தப் பதவியை வழங்கியிருந்ததாகவும், இரண்டு தடவைகள் அவர் பாராளுமன்ற அரசியல்பேரவையிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசியல்குழு வழங்கியிருந்ததாகவும் கூறினார். நேற்றைய தினம் சுமார் நான்கு மணிநேரங்கள் அதே கருத்தை அவரிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
ஆகவே, கட்சியின் உயரிய குழு வழங்கிய பதவியை, அதே குழுவின் ஆலோசனையையும் வற்புறுத்தலையும் அவர் செவிமடுக்கவில்லை என்ற காரணத்தினால், அந்தப் பதவியை அவரிடமிருந்து மீளப்பெற தீர்மானித்ததாக சுமந்திரன் கூறினார்.இதனிடையே, இது தொடர்பாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இதுவரையில் அவ்வாறான எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.