உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புக்களில் பிரதமர் ஹரிணி.!
சுவிட்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அங்கு உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றார்.
உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவர் பேச்சு நடத்தி வருகின்றார்.
அந்தவகையில் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன் இரு தரப்பு கலந்துரையாடலில் பிரதமர் ஈடுபட்டார்.
இதன்போது டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்குச் சிங்கப்பூர் வழங்கிய உதவிகளுக்காகப் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது என்றும் பிரதமர் கூறினார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவையும் பிரதமர் சந்தித்து, இரு தரப்பு பேச்சு நடத்தினார்.
இந்தக் கலந்துரையாடல்களில் தொழில் அமைச்சரும் நிதி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும் பங்கேற்றார்.
மேலும் சில சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.
சுவிஸில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள மேலும் சில நாடுகளின் தலைவர்களை அவர் இன்று சந்திக்கவுள்ளார்.
எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதியளவிலேயே பிரதமர் நாடு திரும்புவார் என அறியமுடிகின்றது.





