கிராம அலுவலர் மீதான தாக்குதல்.. ஆட்பிணையில் சென்ற இளங்குமரன் .!
கடந்த நவம்பர் மாதம் இறுதியில் பேரிடர் சமயம் கிளிநொச்சியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளர் ஒருவரைத் தாக்கினார் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கையில், நேற்று நகர்த்தல் பத்திரம் ஒன்றை மன்றில் சமர்ப்பித்து, அதன் பின் மன்றில் சரணடைந்து பிணை பெற்றுச் சென்றிருக்கின்றார் இளங்குமரன் எம்.பி.
ஏற்கனவே இந்த விடயத்தில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இளங்குமரன் எம்.பி., வழக்கு கடந்த 16ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மன்றில் முன்னிலையாகவில்லை. அதனால் அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கும்படி பாதிக்கப்பட்ட கிராம சேவையாளர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
எனினும் அன்றைய தினம் நிரந்தர நீதிவான் மன்றில் பிரசன்னமாகி இருக்காமல் வழக்கு பதில் நீதிவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட காரணத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்படவில்லை. பதிலாக நான்கு நாள்களில் – அதாவது இன்று – வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்தது.இந்தநிலையில் நேற்றே இளங்குமரன் சார்பில் ஒரு நகர்த்தல் பத்திரம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அது எடுக்கப்பட்ட போது இளங்குமரன் மன்றில் முன்னிலையானார்.
இன்று நாடாளுமன்ற அமர்வு இருக்கின்ற காரணத்தினால், தான் நாடாளுமன்றுக்குச் செல்ல வேண்டி இருக்கின்றது என்றும், அதனால் முற்கூட்டியே ஒரு நாள் மன்றில் முன்னிலையாகின்றார் என்றும் இளங்குமரன் தரப்பில் நேற்றுத் தெரிவிக்கப்பட்டது.அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவரை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தது.எனினும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி வழக்கு இன்றும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து வழக்கு செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.