பொற்பதி – மணல்காடு இணைப்பு வீதியை புணரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!
யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கு பொற்பதி – மணல்காடு இணைப்பு வீதியை புணரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல்காடு கிராமத்திற்கும் பொற்பதி கிராமத்திற்கும் இடையேயான சுமார் 500 மீற்றர் விதி பல ஆண்டுகளாக புன்னரமைக்கப்படாமையால் பொற்பதி மற்றும் மணல் காடு கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொற்பதி மற்றும் மணல்காடு கிராமங்கள் மீன்பிடி தொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் 500மீற்றர் வீதி சீரின்மை காரணமாக சுமார் 8 km தூரம் சுற்றி சென்று வருகின்றனர்.
மேலும், பொற்பதி ரோமன் காத்தோலிக்க பாடசாலையில் தரம் 9 வரையே வகுப்புக்கள் நடைபெறுகின்றன. மணல்காடு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் க.பொ.த. உயர் தரம் வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
பொற்பதி பாடசாலையில் கற்கின்ற மாணவர்கள் 10, 11 மற்றும் உயர் தரங்களில் கல்வி கற்க வேண்டிய நிலையில் பருத்திதுறைக்கு சுமார் 12 km தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அந்த மாணவர்கள் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். ஆகையால் உரியவர்கள் இது குறித்து கவனமெடுத்து வீதியை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
