மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.!
“இலங்கையில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுகின்றனர். அதற்கு இடமளிக்கமாட்டோம். இனவாதம் நிச்சயம் தோற்கடிக்கப்படும்.” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான பிரதான நிகழ்வு யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“போரின்போது வடக்கில் பல வீடுகள் சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த வீடுகள் இன்னும் முழுமையாக மீளமைக்கப்படவில்லை.
போர்க் காலத்திலும் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர். தற்போதும் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை. தமக்கென வீடொன்று இன்மையே இதற்கு பிரதான காரணமாகும்.
எனவே, போரால் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் வீடில்லாப் பிரச்சினைக்கு எமது ஆட்சியின் கீழ் தீர்வு காணப்படும்.” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எம் மீது நம்பிக்கை வைத்தே வடக்கு மக்கள் வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நாம் செயல்படமாட்டோம். ஏனெனில் இது மக்களுக்கான அரசாங்கமாகும்.
அதேவேளை, இனவாதம் என்பது இந்நாட்டுக்கு அழிவையே தந்துள்ளது. இதன்மூலம் எவ்வித நன்மையும் கிட்டவில்லை. மக்கள் மத்தியில் துயரங்களே குவிந்தன.
தற்போதும் அரசியலுக்காக இனவாதப் பிரச்சினையை தோற்றுவிப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். நாம் இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” – என்றார்.