முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி ஆலயச் சூழலில் உள்ள திருமுறிகண்டி, இந்துபுரம், பனிக்கன்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 874 குடும்பங்களுக்கு மொத்தமாக 4.08 மில்லியன் ரூபாய் பெறுமதியான உலர் உணவு நிவாரணப் பொருட்கள் திருமுறிகண்டி ஆலய நிதியத்தினால் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (09) திருமுறிகண்டி ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களினால் உலர் உணவு நிவாரணப் பொதிகள் கையளிக்கப்பட்டது.
திருமுறிகண்டி ஆலயமானது இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் இந்துப் பண்பாட்டு நிதியத்தால் நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்படுத்தக்கது.
இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர், மாவட்ட இந்து கலாச்சார திணைக்களத்தின் உத்தியோகத்தர், கிராம அலுவலகர்கள், திருமுறிகண்டி பிரதேச மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.













