“முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இருவரை காணவில்லை எனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 80 பேர் 24 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு ஆயிரம் குடும்பங்கள் உறவுகள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்” என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (29) இரவு 9.06 மணிக்கு முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ஊடகங்களுக்கான அறிக்கைகளை பகிரத் தொடங்கியுள்ளது.
இரவு 8.00 மணி நிலவரத்தின் அடிப்படையில் தற்போது வரையில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஐந்து இடைத்தங்கல் முகாம்களில் 351 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 79 பேரும், கரைதுறைபற்று பிரதேசத்தில் 7 இடைத்தங்கல் முகாம்களில் 118 குடும்பங்களை சேர்ந்த முந்நூற்று அறுபது பேரும், மாந்தை கிழக்கு பிரதேசத்தில் ஐந்து இடைத்தங்கல் முகாம்களில் 153 குடும்பங்களை சேர்ந்த 516 பேரும், துணுக்காய் பிரதேசத்தில் ஒரு இடைத்தங்கல் முகாமில் 27 குடும்பங்களை சேர்ந்த 65 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 242 குடும்பங்களைச் சேர்ந்த 788 பேரும் என 24 இடைத்தங்கல் முகாம்களில் 891 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 808 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாயாறு பாலம் உடைந்தமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வட்டுவாகல் பாலம் சேதமடைந்துள்ளமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. விவசாயிகள் இருவர் காணாமல் போயுள்ளனர்.
மின்சாரம் இல்லை, தொலைபேசி இணைப்புக்கள் செயற்படவில்லை. அனைத்து வீதிகளும் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.














