மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பெண்டுகள்சேனை பூலாக்காடு சீல்லிக்கொடி மடுவுக்கு மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரிய வேதம் பூலாக்காடு – கிரான் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான மூத்த தம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.
குறித்த நபர் நேற்று (23) காலை தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியிலுள்ள சீல்லிக்கொடி மடுவுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றவர் திரும்பி வராததை அடுத்து அவரை தேடி சென்ற போது இன்று காலை யானை தாக்குதலுக்கு பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய சம்பவ இடத்துக்கு சென்ற கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ் ஆனந்தன், மற்றும் பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொள்கின்றனர்.













