வன்முறையாக மாறிய போராட்டம் – டெல்லியில் சுமார் 70 பேர் கைது!
டெல்லியில் திங்களன்று (20) ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நடத்திய “சான்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் உட்பட 118-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.
அத்துடன், சுமார் 70 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள டெல்லி காவல்துறை, இந்தப் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டியதுடன், போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், பாதுகாப்புப் படையினரைத் தாக்கியதாகவும், அரசு வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களின்போது 118-க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் விசேட பொலிஸ் ஆணையாளர், இணை பொலிஸ் ஆணையாளர், மேலதிக பொலிஸ் ஆணையாளர், பிரதி பொலிஸ் ஆணையாளர், மேலதிக பிரதி பொலிஸ் ஆணையாளர் மற்றும் உதவி பொலிஸ் ஆணையாளர் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளும், பல பெண் பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மோதலின்போது சுமார் 60 போராட்டக்காரர்களும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த ஏனைய காவலர்களுக்கு மருத்துவ-சட்டரீதியான பரிசோதனை நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சுமார் 70 போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் தங்களுக்குள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய டெல்லி காவல்துறை, சட்டவிரோத மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் அனைவரும் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.
நீட் (NEET) தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் வரை ‘சலோ சன்சத்’ பேரணியை CJP அமைப்பு ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.