குயானாவில் 133 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது!
குயானாவில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்;
அதேவேளையில், காணாமல் போனவர்களைக் கண்டறியும் வகையில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
அரசாங்கத்தின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னின்று வழிநடத்தும் குயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ், ‘எம்வி பரிமா’ (MV Barima) கப்பல் தலைநகர் ஜோர்ஜ்டவுனிலிருந்து வட அட்லாண்டிக் கடற்கரை வழியாக போர்ட் கைடுமாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்துக்குள்ளானதாக கூறினார்.
மீட்கப்பட்ட குழுவில் 41 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் இருந்ததாக பிலிப்ஸ் தெரிவித்தார்.
காணாமல் போன பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்களா என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
ஹெலிகொப்டர்கள், விமானங்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் மூலம் 1,000 சதுர மைல் பரப்பளவில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.