அரசின் ஜனநாயக விரோதப் போக்குக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.!
இலங்கையில் தற்போது தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும், அரசுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் திட்டமிட்டுத் தள்ளப்படுகின்றனர் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார் .
கேகாலை மாவட்டத்தின் டெடிகம தொகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அரச அதிகாரிகள் மற்றும் சாட்சிகளை வாக்குமூலம் பெறும் இடங்களுக்கே சென்று, ‘உங்களுக்கும் தற்கொலை செய்துகொள்ள நேரிடும்’ என அச்சுறுத்தி அழுத்தம் கொடுக்கும் கலாச்சாரம் உருவாகியுள்ளது. இவ்வாறு அச்சுறுத்தப்பட்ட பலரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இது குறித்து முறையான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். அரச அதிகாரிகள் நாட்டின் நலனுக்காக முடிவுகளை எடுக்க அஞ்சும் சூழல் உருவாகியிருப்பதால், ஒட்டுமொத்த அரச கட்டமைப்புமே முடங்கியுள்ளது.
நாட்டின் வரலாற்றிலேயே அதிக வரிகளை விதித்த அரசாக இது திகழ்கின்றது. இதனால் விவசாயிகள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் கணக்கிலிருந்து பெருமளவு பணத்தைக் ஹேக்கர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார் என்று அரசு கூறுவது வேடிக்கையானது. மத்திய வங்கியும் நிதி அமைச்சும் பொறுப்பைத் தட்டிக்கழித்துக் கொள்கின்றன. இறுதியில் இந்த நட்டத்தை மக்களே ஈடுசெய்ய வேண்டியுள்ளது.
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி மற்றும் துறைமுக ஊழல்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அரசு, இந்த ஊழல்களைச் சுட்டிக்காட்டும் நபர்களைக் கைது செய்ய மாத்திரம் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கின்றது.
அரசு நீதித்துறையை அரசியல் மயப்படுத்த முயற்சிப்பதால், காமன்வெல்த், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அதன் சுயாதீனத்தைப் பாதுகாக்கப் போராடி வருகின்றன.
இத்தகைய அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் நீண்ட காலம் ஆட்சியைத் தொடர முடியாது.
அரசின் ஜனநாயக விரோதப் போக்குக்கு எதிராக கிராம மட்டத்திலிருந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” – என்று அவர் அழைப்பு விடுத்தார்.