பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகக் கொண்டு வர முயற்சிக்கப்படும் புதிய சட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும் கோரி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மக்கள் போராட்டம் இன்று யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமான எதிர்ப்புப் பேரணி, காந்திப் பூங்காவை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் போது, “பயங்கரவாதத் தடைச் சட்டமும் வேண்டாம், புதிய சட்டமும் வேண்டாம்”, “மக்களை ஒடுக்கும் சட்டங்கள் வேண்டாம்” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு பங்கேற்பாளர்கள் கோஷமிட்டனர்.போராட்டத்தின் இறுதியில், ஐக்கியநாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது.
அதில், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும், அதற்குப் பதிலாகக் கொண்டு வர முயற்சிக்கப்படும் புதிய சட்டத்தையும் முழுமையாக எதிர்ப்பதாகவும், இச்சட்டங்கள் மனித உரிமைகளை மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தச் சட்டங்கள் தமிழ் மக்களின் உரிமைகள், கருத்துச் சுதந்திரம், நீதி கோரும் உரிமை ஆகியவற்றை பாதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
அதேபோல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நில அபகரிப்பு, இராணுவ நிலைமை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைஇலங்கை அரசும் சர்வதேச சமூகமும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.











