உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தமது காணிகளை பறித்து சிங்களவர்களுக்கு வழங்கும் ஒரு கட்டமைப்பாகவே தமிழர்கள் மகாவலியை நோக்குகின்றனர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

தமது காணிகளை பறித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கின்ற ஒரு கட்டமைப்பாக மகாவலி அதிகார சபையை தமிழ் மக்கள் வெறுப்புடன் நோக்குவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை மகாவலி அதிகார சபையினால் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கப்படும் தமிழ் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதகமான கிவுல் ஓயா திட்டத்தை ஒருபோதும் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று (17) கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் கிவுல் ஓயா திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மேலும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஏற்கனவே அறிவித்தல் வழங்கப்பட்டதற்கு அமைவாக கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரின் பங்கேற்புடன் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று (17) கிவுல் ஓயா நீர்ப்பாசன குடியேற்ற திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அந்த வகையில் மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த கிவுல் ஓயா திட்டம் சார்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் இத்திட்டம் தொடர்பான பாதக நிலைமைகளை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.

குறிப்பாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஏற்படப்போகும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பாக எம்மால் மிகத் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கூழாங்குளம் வயல், வெடிவைத்தகல்லு வயல், வெடிவைத்தகல்லு கிராமம், ஈச்சங்குளம் வயல், கோவில் புளியங்குளம் வயல், காட்டுப் பூவரசங்குளம் வயல், காஞ்சூரமோட்டை கிராமம் உள்ளிட்ட தமிழர்களின் பூர்வீக பகுதிகள் 910 ஏக்கர் நிலப்பரப்பு நீரில் மூழ்க போகிறது என்பதை கிவுல் ஓயா திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதனால் அந்த நிலங்களுக்குரிய மக்கள் பாதிக்கப்படப் போகின்றனர். எனினும் இத்திட்டம் சார்ந்த கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றபோது இத்திட்டத்தினால் பாதிக்கப்படப் போகின்ற தமிழ் மக்கள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

குறிப்பாக கடந்த 09.02.2026 அன்று குறித்த கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் மணலாறு பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இத்திட்டத்தால் பாதிக்கப்படவிருக்கின்ற தமிழ் மக்கள் அழைக்கப்படாதமை குறித்து சுட்டிக்காட்டியதோடு, இத்திட்டத்தால் பயன்பெற விருக்கின்ற பெரும்பான்மை இனத்தவர்கள் மாத்திரமே அக் கலந்துரையாடலில் அழைக்கப்பட்டிருந்தமையினையும் அமைச்சர் லால் கிந்தவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.

மேலும் இத்திட்டத்தினால் ஏற்கனவே தமிழ் மக்களின் பூர்வீக பகுதியான மணலாற்றை அபகரித்து அங்கு குடியேற்றப்பட்டுள்ள 4372 பெரும்பான்மையினக் குடும்பங்களும், குடியேற்றப்படவுள்ள 1628 பெரும்பான்மையின குடும்பங்களுமாக மொத்தம் 6000 வரையிலான பெரும்பான்மையின குடும்பங்களே இத்திட்டத்தினால் பயன்பெறவிருப்பதாக திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினேன்.

அத்தோடு அடர் வனங்கள் அழிக்கப்படப் போவதால் ஏற்படப்போகும் பாதிப்பு தொடர்பிலும் எம்மால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக இத்திட்டத்திற்கென காடுகள் அழிக்கப்படுவதால் மழைவீழ்ச்சி உள்ளிட்ட விடயங்களில் தாக்க மேற்பட்டது என்பதும் வெளிப்படுத்தப்பட்டது. வனவிலங்குகள் மற்றும் பறவையினங்கள் என்பன அழிவடையும் ஆபத்துத்துக்களும் ஏற்படும் என்ற விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டன.

மேலும் தமிழ் மக்களின் காணிகளைப் பறித்து பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்குகின்ற ஒரு கட்டமைப்பாகவே மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் நோக்குகின்றார்கள் என்பதையும் இதன்போது எடுத்துரைத்தேன்.

அந்தவகையில் கடந்த கால ஆட்சியாளர்களின் காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை பறித்து மகாவலி அதிகாரசபை 30 பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஒருவருக்குத் தலா 25 ஏக்கர் வீதம் பகிர்ந்து கொடுத்ததை இதன்போது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன். இந்த 30 பயனாளிகளில் முன்னாள் அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வாவின் தங்கையும் அடங்கியுள்ளார் என்பதையும் இதன்போது வெளிப்படுத்தியிருந்தேன்.

அத்தோடு மணலாறுப் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் மகாவலி அதிகாரசபையால் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையினத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. அவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளுக்கு தமிழ் மக்களிடம் காணி அனுமதிப்பத்திரம் இருக்கத்தக்கதாக கடந்த 2013ஆம் ஆண்டு மயில் குளம் என்ற இடத்தில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கையொப்பத்துடன் மகாவலி அதிகாரசபையின் காணி அனுமதிப்பத்திரங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதுதவிர வவுனியா வடக்கில் திரிவச்ச குளம் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை மகாவலி அதிகாரசபை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளித்து அந்தர் வெவ என அப்பகுதி பெயர்மாற்றப்பட்டிருப்பதையும் இதன்போது சுட்டிக்காட்டினேன்.

அத்தோடு மகாவலி அதிகாரசபையின் ஆளுகையிலுள்ள திரிவைச்சகுளத்தின் அருகேயுள்ள அடர்வனங்கள் பாரிய அளவில் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கெதிராக முறையீடு செய்யப்பட்டபோதும் மகாவலி அதிகாரசபை இதுவரை நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு காடு அழிக்கப்பட்டு வெட்டப்பட்ட மரங்களின் வருமானம் என்னவானதென்பது கூட தெரியாத நிலையே காணப்படுகின்றது என்பதையும் இதன்போது வெளிப்படுத்தினேன்.

இவ்வாறாக தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் மகாவலி அதிகாரசபை மும்முரமாக ஈடுபடுவதாலேயே தமிழ் மக்கள் மகாவலி அதிகாரசபையை வெறுப்போடு நோக்குகின்றார்கள் என்பதையும் தெளிவுபடுத்தினேன்.

அத்தோடு தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றுவதுடன், சூழலியல் பாதிப்புக்கள் என பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவுள்ள இத்திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் இதன்போது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தேன்.

இந்நிலையில் இதன்போது அமைச்சர் கே.டி.லால்காந்த பதிலளிக்கையில்,

இத்திட்டத்தின் பாதகநிலை தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடி தீர்மானங்களை எடுத்து கையெழுத்திட்டு தம்மிடம் சமர்பிக்குமாறு தெரிவித்ததுடன், தாம் உரியவகையில் நிலமைகளை ஆராய்ந்து நடவடிக்மைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை வடக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தம்மால் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடாத்தப்படுமெனவும் அமைச்சர் கே.டி.லால்காந்தவால் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், அக்கலந்துரையாடலுக்கு உரிய அனைத்துத் தரப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுமெனவுந் தெரிவித்தார்.

குறித்த காணிவிடுவிப்புத் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை இம்மாதமே நடாத்துவதற்கான ஏற்பாடுகளை விரைந்து முன்னெடுக்குமாறு நான் இதன்போது அமைச்சரிடம் கோரியிருந்தேன் -என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

91 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

39 0 0