நாளை முதல் பலத்த மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்.!
இலங்கைக்கு தென்கிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியொன்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக கடற்பரப்புகள் கொந்தளிப்பாக இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் இன்று (16) இரவு மேல், சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளையும் (17) எதிர்வரும் நாட்களிலும் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவலாம் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.