தபால் சேவையை நவீனமயமாக்க புதிய வாகனங்கள் சேவையில்!
இலங்கை தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, நேற்று நாட்டளாவிய தபால் போக்குவரத்து வலையமைப்பில் 10 பாரவூர்திகள் மற்றும் 20 க்ரூ கெப் வாகனங்கள் இணைக்கப்பட்டன. இந்த புதிய வாகனங்களின் மொத்த பெறுமதி 590 மில்லியன் ரூபாவுக்கு மேல் வரை உள்ளது.அரசாங்கம் இந்த முழுமையான திட்டத்திற்கு மொத்தம் 849 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது
.
தபால் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த புதிய வாகனங்கள் நாடளாவிய ரீதியில் தபால் பொருட்கள், பணம் செலுத்தி பெறும் சேவை மற்றும் SL Post Courier சேவைகளை விரைவுபடுத்த பயன்படுத்தப்படவுள்ளன.
மேலும், தபால் ஊழியர்களுக்கான துவிச்சக்கரவண்டி தாங்கிகள், அலுவலக திறனை அதிகரிக்க கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் டெப்லெட்கள் வழங்கப்பட்டன.தபால் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க புதிய “செயற்பாட்டுக் கட்டுப்பாட்டு மற்றும் பதிலளிப்புப் பிரிவு” திறப்பு செய்யப்பட்டது.தபால் தலைமையகம், மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் மற்றும் மட்டக்களப்பு தபால் நிலையங்களில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்படவுள்ளன.
கடந்த ஆண்டு ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டும், தபால் திணைக்களம் 13,450 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. சேவையை வலுப்படுத்த 2,800 பணியாளர்கள் புதிதாக இணைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அமைச்சர் இதன்போது, தபால் சேவையை மேலும் நவீனப்படுத்தி அதன் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், பொதுமக்கள் இச்சேவைகளை அதிகளவில் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.