போதை வர்த்தகர்களுக்கு பிணை மறுக்கும் புதிய சட்டம் விரைவில் – சுனில் வட்டகல.!
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்க அரசு கவனம் செலுத்தி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதாக கூறினார்.இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவது தொடர்பாக எழும் சிக்கல்களை கருத்தில் கொண்டு, வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அவர்களை தடுப்பில் வைக்க முடியுமா என்பது குறித்து சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார்.
அதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நச்சுப் பொருள் சட்டத் திருத்தத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் கூடுதல் திருத்தம் ஒன்றை கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், குற்றச்செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளதாகவும், அதற்கமைய பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.