உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அரகலய போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் கறுப்புக்கொடி ஏற்றுவதை தவறு என்பதா?

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என்று தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரம் வருமாறு:-

“இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிக நீண்டகாலமாக சுதந்திர தினத்தையும் அதற்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசாகிய போது கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் தமிழ் மக்கள் கறுப்புக்கொடி போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளமையுடன் அவற்றை கரிநாட்களாகவும் பிரகடனப்படுத்தி வந்துள்ளனர்.

இலங்கை என்பது சிங்கள, தமிழ் இராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஒன்றிணைத்த இராசதானிகளை சிலோன் என்ற பெயரில் சூழ்ச்சியின் காரணமாக பெரும்பான்மையினமான சிங்கள தரப்பிடம் கையளித்து விட்டுச் சென்றார்கள் என்பதும் வரலாறு.

ஆகவே, இவ்வாறான சுதந்திர தினத்தையோ அல்லது குடியரசு தினத்தையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புக்கான உரிமை போன்றவை பல்வேறு வழிகளில் நிராகரிக்கப்பட்டு தமது சுதந்திரத்தைத் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாகத்தான் இங்கு நீண்டதோர் ஆயுதப் போராட்டமே நடைபெற்றது.

எனவே, தமிழ் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அரசின் தமிழர்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள்? ஏன் ஊர்வலங்களையும் கவனவீர்ப்புப் போராட்டங்களையும் நடத்துகின்றார்கள்? – என்பதற்கு அரசு சரியான தீர்வைக் கண்டுகொள்ள வேண்டுமே தவிர, ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைக் காட்டும் மக்களையோ, மாணவர்களையோ தண்டிப்பதானது ஜனநாயக விரோதமானதும் சட்டவிரோதமானதுமாகும்.

இலங்கையின் அடிப்படை உரிமைகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, ஜனநாயக வழிமுறைகளில் கறுப்புக்கொடி ஏற்றுதல் உட்பட எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி ஏற்றுவது இயல்பானது.

தமிழ் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதும் தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதும் துக்ககரமான செயற்பாடே. அவ்வாறான துக்ககரமான செயற்பாட்டின்போது பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ கறுப்புக் கொடி கட்டுவது சட்டவிரோதம் என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மக்களுக்கோ அன்றில் சொத்துக்களுக்கோ எவ்வித இடையூறும் விளைவிக்காமல் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயகபூர்வமான நடவடிக்கையே.

கடந்த 4ஆம் திகதி யாழ். பல்கலைக்கழத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோருவதும் அதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பதும் சட்டவிரோதமானதுடன் ஜனநாயக விரோதமானதுமாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கருதுகின்றது.

மாணவர்களின் அடிப்படை உரிமைகளிலோ ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்களிலோ தலையீடு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாகவும் அச்சவுணர்வின்றியும் தமது கல்வியைத் தொடர பல்கலைக்கழக ஆசிரிய சமூகம் அதற்கான பொதுவெளியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

பல்வேறுபட்ட மாணவர் போராட்டத்தை நடத்தி மிகப் பிரமான்டமான அரகலய போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ் மாணவர்களின் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை நசுக்குவதோ அன்றி அவர்களைத் தண்டிப்பதோ சரியானதா என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

98 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

36 0 0