வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு.!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (11) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய – அநுராதபுரம் வீதியில், கோன்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் நோக்கி சென்ற வேன், முக்சக்கரவண்டியொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது, எதிர்திசையில் வந்த உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுநர், தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் நன்னேரியா பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்துடன் தொடர்புடைய, வேன் சாரதி கைது செய்யப்பட்டதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில், இப்பன்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை நோக்கி சென்ற கெப்ரக வாகனமொன்று, எதிர்திசையில் வந்த மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, விபத்தில் காயமடைந்த இருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துடன் தொடர்புடைய கெப்ரக வாகனத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உஸ்வத்த சுற்றுவட்ட வீதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை நோக்கிச் சென்ற உந்துருளி வீதியில் சென்ற பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த பாதசாரி லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மொரட்டுவை பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய உந்துருளி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.