போதைப்பொருளுடன் கைதான பெண் வழங்கிய தகவல்; வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள்.!
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக இரத்மலானையைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சந்தேக நபரால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், நேற்று மாலை கல்கிஸ்ஸை பிரிவெனா வீதியிலுள்ள வீட்டிலிருந்து 10 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 800,000 ரூபாய் பணம், ஒரு துப்பாக்கி, வெடிமருந்துகள், 8 போலி மோட்டார் சைக்கிள் உரிமத் தகடுகள், 4 போலி முச்சக்கர வண்டி உரிமத் தகடுகள், 18 போலி கார் உரிமத் தகடுகள், ஒரு மின்னணு தராசு, 2 தங்க சங்கிலிகள், ஒரு தங்க வளையல் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒருவரிடமிருந்தே இந்த ஆயுதங்கள் குறித்த பெண்ணுக்குக் கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த ஆயுதங்கள் அனைத்தும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டவையா அல்லது திருடப்பட்டவையா என்பது தொடர்பில் கல்கிஸ்ஸைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.