துப்பாக்கிச்சூடு வழக்கில் இருவருக்கு பிணை – உயிரிழந்த சிறுவனுக்கு வட்டுக்கோட்டையில் இன்று இறுதி அஞ்சலி.!
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இருவரையும் பிணையில் விடுவிக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலா 25 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும், தலா இரண்டு ஆள் பிணைகளிலும் அவர்களை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அல்லைப்பிட்டிப் பகுதியில், பொலிஸார் நிறுத்துமாறு அறிவித்தபோதும் நிறுத்தாது பயணித்த ‘ஹயஸ்’ ரக வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பில் வாகனத்தில் பயணித்த மற்றொரு நபரும், உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று (புதன்கிழமை) சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தின் அடிப்படையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலத்தில், சம்பவம் தொடர்பாக கைதானவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.ஆரம்பத்தில் சிறுவனின் சிறிய தந்தையே வாகனத்தை ஓட்டியதாகவும், பின்னர் தீவுப் பகுதியில் சிறுவன் வாகனம் ஓட்ட விருப்பம் தெரிவித்ததால் அவரிடம் வாகனம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் வாகனத்தை மறித்தபோதும் சிறுவன் நிறுத்தாமல் சென்றதாகவும், மண்டைதீவு காவலரணில் பொலிஸார் மறிக்கத் தயாராக இருந்ததை கண்டு வாகனத்தை மீண்டும் அல்லைப்பிட்டி நோக்கித் திருப்பியபோது, பின்னால் துரத்தி வந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
வாகனத்தில் இருந்ததாகக் கூறப்படும் சாணகம், கயிறு, வாள் மற்றும் வாகனத்தில் காணப்பட்ட ஏனைய பொருட்கள் தொடர்பில் தமக்கு எவ்விதத் தகவலும் தெரியாது எனவும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.சமூக வலைத்தளங்களில், இவர்கள் சட்டவிரோத மாடு இறைச்சி விற்பனைக்குழுவுடன் தொடர்புடையவர்கள் எனப் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.
இருப்பினும், உயிரிழந்த சிறுவனோ அல்லது கைதான இருவரோ இதற்கு முன்பு குற்றச்சாட்டுகள் அல்லது குற்றப் பின்னணிகள் கொண்டவர்கள் எனப் பொலிஸார் நீதிமன்றத்தில் எவ்வித தகவலும் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று (வியாழக்கிழமை) வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.