அரசு படுதோல்வியைத் தவிர்க்க தேர்தல் இழுத்தடிப்பு – நளின் பண்டார தெரிவிப்பு.!
கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வரும் தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அச்சத்தினாலேயே தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,“இந்த அரசு மிகக் குறுகிய காலத்திலேயே மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றது. அண்மையில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் அதற்கு தெளிவான சான்றாகும். குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து கூட்டுறவு சங்கத் தேர்தல்களிலும் அரசு தோல்வியடைந்துள்ளது. நாடு முழுவதும் இதே நிலை தொடர்கிறது.
மேடைகளில் தேர்தலுக்கு பயமில்லை என கூறினாலும், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்கு துணிவு இல்லை.” எனக் குறிப்பிட்டார்.
அரசின் வாக்குறுதிகள் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.“புதிய அரசமைப்பை உருவாக்குவதாக கர்தினால் ஆண்டகைக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி என்னவாயிற்று? அதேபோல், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஆட்சிக்கு வந்ததும் வெளிப்படுத்துவோம் என தெரிவித்திருந்தனர். தற்போது அவர்கள் ஆட்சிக்கு வந்து இரண்டாவது ஏப்ரல் மாதம் நெருங்குகின்றது. இருப்பினும், இதுவரை பிரதான சூத்திரதாரி யார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. கர்தினால் ஆண்டகையை இந்த அரசு ஏமாற்றியுள்ளது.” என குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் வலியுறுத்துகையில்,“நாட்டை முன்னேற்றுவதற்கான தெளிவான திட்டம் அரசிடம் இல்லை. கடந்த ஒரு ஆண்டில் கணிசமான அபிவிருத்தி அல்லது மாற்றம் எதுவும் இடம்பெறவில்லை. மாறாக, நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதிலேயே அரசு ஈடுபட்டு வருகின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலும் உயிர்த்த ஞாயிறு விவகாரத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தாமல், உண்மையான சூத்திரதாரியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.” என நளின் பண்டார எம்.பி. வலியுறுத்தினார்.