அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூடு: “நீதியான விசாரணை அவசியம்” – கஜேந்திரகுமார் தெரிவிப்பு.!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களே விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலைமை நாட்டில் காணப்படுகின்றதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், போரற்ற சூழலில் ஜனாதிபதி யாழ்ப்பாண வீதிகளில் சுதந்திரமாகச் செல்வதற்கான நிலைமை காணப்படும் வேளையில், வாகனத்தை நிறுத்தாமல் சென்றவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதை நியாயப்படுத்த முடியாது என கூறினார்.வாகனத்தை நிறுத்துமாறு கட்டளையிட்ட பின்னரும் அது மீறிச் சென்றால், வாகனத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையே பொலிஸார் மேற்கொள்ள வேண்டுமே தவிர சாரதியை சுட்டுக் கொல்ல முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட வாகனத்தில் மாட்டுச் சாணம் இருந்ததாக பொலிஸார் காட்டிய விதம் சந்தேகத்திற்கிடமானதாக இருந்ததாகவும், வாகனத்திலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் பொலித்தீன் பையில் சாணம் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் நீதியான, வெளிப்படையான விசாரணைகள் நடைபெறுமா என்பது சந்தேகத்திற்குரியது என அவர் தெரிவித்தார்.நாட்டில் அவசரகாலச் சட்டம் அமலில் உள்ள சூழலில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களே இத்தகைய சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன என்றும், கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒருவர் குற்றவாளி என்றாலும், பொலிஸார் துப்பாக்கிச்சூட்டின் மூலம் உயிரிழக்கச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறிய அவர், சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம் என வலியுறுத்தினார்.