மின் கம்பத்துடன் மோதிய இரு சக்கர வாகனம்; அதிவேகத்தால் பறிபோன இளைஞனின் உயிர்!
மொரட்டுவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த சமிந்து நிர்மால் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று இரவு பாணந்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த அவர், கொரலவெல்ல லன்சியா தேவாலயத்திற்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்றை முந்திச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த வேளையில், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த உயர் மின்னழுத்த மின் கம்பத்தில் மோதியுள்ளது.
கடுமையாக காயமடைந்த இளைஞர் உடனடியாக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.