போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுத் திட்டம்:ஜனாதிபதி தலைமையில் நாளை நுவரெலியாவில்!
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசியச் செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வு நுவரெலியா நகரில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மலையக மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் விரிவான விழிப்புணர்வு செயற்பாடுகளின் மூலம் மக்களைப் போதைப் பழக்கத்திலிருந்து விடுவித்து, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
மேலும், போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு சிறப்பான பங்களிப்பு வழங்கிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இதன் போது இடம்பெறவுள்ளது.மத்திய மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் முக்கிய முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.